இறைவன் இருக்கிறான்!! மனம் மாறிய பிரபல நாத்திகர்

   "அறிவியல் இவ்வளவு வளர்ந்துவிட்ட காலத்திலும் இறைநம்பிக்கையா?" - இப்படி சிலபல நாத்திகர்கள் பேச நாம் கேட்டிருக்கலாம்.



அறிவியல் வளர்ச்சி இறைவனை பொய்ப்பிக்கின்றது என்பது அசட்டுத்தனமான அறியாமைக்கருத்து மட்டுமல்ல, தர்க்கரீதியாக ஒத்துவராதும் கூட. ஏனென்றால், இப்படி பேசும் நாத்திகர்களில் எத்தனை பேர் அறிவியல் ஆய்வு முடிவுகளை உற்று நோக்குகின்றனர் என்பது தெளிவாகவில்லை.
   அறிவியல் கடவுளை மறுக்கின்றது என்று அவர்கள் எப்படி எண்ணுகின்றார்களோ, அதுபோலவே, அறிவியல் வளர்ச்சி இறைவனை மெய்ப்பிக்கின்றது என்று ஆத்திகர்கள் நம்புகின்றனர்.
 

       இதில் கவனிக்கப்பட வேண்டிய உண்மை என்னவென்றால், உலகின் செல்வாக்கு மிகுந்த நாத்திகர்கள் என்று கருதப்பட்டவர்கள் ஆத்திகத்திற்கு தங்கள் எண்ணங்களை மாற்றியதற்கு காரணம் இதே அறிவியல் வளர்ச்சி தான்.

 
       பேராசிரியர் ஆண்டனி ப்ளு (Antony Flew) - இன்று எப்படி நாத்திகர்களினால் ரிச்சர்ட் டாகின்ஸ் கொண்டாடப்படுகின்றாரோ, அதுபோல இருபதாம் நூற்றாண்டில் நாத்திகர்களால் கொண்டாடப்பட்டவர்.


       நாத்திகத்தின் முன்னணி சாம்பியனாக கருதப்பட்ட இவர், சுமார் ஐம்பது ஆண்டு காலம் நாத்திகத்திற்காக தன் வாழ்நாளை கழித்தவர். விவாதங்கள், புத்தகங்கள், பல்கலைகழக சொற்பொழிவுகள் என்று நாத்திகம் குறித்து பேசினாலே இவர் பெயர் தவிர்க்க முடியாது என்று கூறும் அளவிற்கு நாத்திகர்கள் மத்தியில் செல்வாக்குமிக்கவராக திகழ்ந்தார்.


       இறைநம்பிக்கை ஏன் அர்த்தமற்றது என்பது குறித்து இவர் எழுதிய "Theology and Falsification" என்ற கட்டுரை, சென்ற நூற்றாண்டின் அதிகம் மறுபதிப்பு செய்யப்பட்ட தத்துவ கட்டுரையாகும்.


       இதுவரையிலான இவருடைய அறிமுகத்தை வைத்து, இவர் எந்த அளவு நாத்திகர்களிடையே முக்கியத்துவம் பெற்றிருந்தார் என்பதை அறிந்திருப்பீர்கள்.


       இப்படியான ஒருவர் ஆத்திகத்தின்பால் திரும்பினால்? தன் திசை மாற்றத்திற்கு அறிவியல் கண்டுபிடிப்புகளே காரணம் என்று கூறினால்?


       Dec 9, 2004-ஆம் ஆண்டு, Associated Press ஊடகம், நாத்திகர்களிடையே மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கும்விதமாக ஒரு செய்தியை வெளியிட்டது. அந்த செய்தியின் தலைப்பு இதுதான்,

"Famous Atheist Now Believes in God" "பிரபல நாத்திகர் தற்போது கடவுளை நம்புகின்றார்"

Associated Press ஊடகத்தின் அந்த கட்டுரையின் நாயகன் ப்ளு அவர்கள் தான். இது நாத்திகர்களால் நம்பவே முடியாத செய்தி.


       ஆத்திகராக மாறினார் ப்ளு என்பது மிக அதிர்ச்சியான தகவல் என்ற போதிலும் அதனை அவர்கள் காலப்போக்கில் கடந்து வந்துவிடலாம். ஆனால், அந்த கட்டுரையின் உபதலைப்பு தான் நாத்திகர்களை கடுமையான கோபத்திற்கும், எரிச்சலுக்கும் உள்ளாக்கியிருக்கும். அந்த உபதலைப்பு இதுதான்.


"One of World's Leading Atheists Now Believes in God, More or Less, Based on Scientific Evidence"
"உலகின் முன்னணி நாத்திகர்களில் ஒருவர், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கடவுளை நம்புகின்றார்"


       எதிர்ப்பார்த்தது போலவே இந்த செய்தி நாத்திகர்களிடையே பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியது. டி.வி, ரேடியோ, நாளிதழ்கள் என்று அனைத்து தரப்பட்ட ஊடங்கங்களிலும் இந்த செய்தி பெரிதாக பேசப்பட்டது. ப்ளு ஆத்திகரானது எந்த அளவு முக்கியத்துவம் பெற்றதென்றால், Associated Press ஊடகம் மட்டுமே இதுக்குறித்து தொடர்ச்சியாக மூன்று கட்டுரைகளை வெளியிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


       நாத்திகத்திற்காக கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டவர் ப்ளு. தன் ஐம்பது ஆண்டு கால பிரச்சாரத்தில் எத்தனை வாதங்களை நாத்திகத்திற்கு எதிராக பார்த்திருப்பார்? எத்தனை விதமான சவால்களை சந்தித்திருப்பார்? அப்படிப்பட்டவர் ஆத்திகத்தின்பால் திரும்புகின்றார் என்றால் மிக வலிமையான வாதங்கள் ஆத்திகத்திற்கு ஆதரவாக, நாத்திகத்திற்கு எதிராக அவருக்கு கிடைத்திருக்க வேண்டும்.


       எதற்காக ஆத்திகத்தின்பால் திரும்பினீர்கள் என்ற கேள்விக்கு அவர் கொடுத்த பதில் "Follow the evidence, wherever it leads" என்பதாகும். அதாவது, ஆதாரங்களை பின்தொடர்ந்து செல்லுங்கள், அவை என்ன சொல்கின்றனவோ அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதாகும்.


       Dec, 2004-ல், இறைவனை தான் நம்புவதாக ப்ளு வெளிப்படையாக அறிவித்தாலும், அதற்கு சில மாதங்களுக்கு முன்பே "Philosopy Now" இதழுக்கு அவர் எழுதிய கட்டுரையில் தன் நிலை குறித்து பின்வருமாறு க்ளூ கொடுத்திருந்தார்,


"It has become inordinately difficult even to begin to think about constructing a naturalistic theory of the evolution of that first reproducing organism," (இனப்பெருக்கம் செய்யும்) உலகின் முதல் உயிரினம், இயற்கையாக பரிணாமம் அடைந்திருக்கும் என்பதை நம்புவது குறித்து யோசிப்பது கூட வர வர கடினமாக இருக்கின்றது.


       உயிர் குறித்து வெளிவரும் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மற்றும் இந்த பிரபஞ்சத்தின் சிக்கலான வடிவமைப்பு போன்றவை தன் நாத்திக நம்பிக்கையை பதம் பார்த்துவிட்டதாக கூறினார் ப்ளு. குறிப்பாக, DNA-க்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள், நம்பவே முடியாத அளவுக்கு சிக்கலான வடிவமைப்பை அவை கொண்டிருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதாகவும், இவையெல்லாம் தற்செயலாக உருவாகியிருக்க வாய்ப்பில்லை எனவும், நிச்சயம் ஒரு அறிவார்ந்த சக்தியாலேயே இவை உருவாக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும் தன் நிலையை தெளிவாக அறிவித்தார் ப்ளு.


       இதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. உயிரியல் உலகை உற்று நோக்கும் எவருக்கும் எளிதாய் புரியும் உண்மை என்னவென்றால், உயிர் என்பது எவ்வளவு சிக்கலானது என்பதை நாளுக்கு நாள் அறிவியல் முடிவுகள் தெளிவுபடுத்தி வருகின்றன என்பதுதான்.


       பேராசிரியர் ப்ளு, அறிவியல் முடிவுகளின் வாயிலாக இறைவனை அங்கீகரித்து மிகப்பெரிய தாக்கத்தை நாத்திகர்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டார். ஆனால் அவர் இத்தோடு நிறுத்தவில்லை. அடுத்த பூகம்பத்தை ஏற்படுத்த ஆயத்தமானார்.



There Is a God



       2007-ஆம் ஆண்டு, ராய் வர்கீஸ் என்பவருடன் இணைந்து ப்ளு வெளிக்கொண்டு வந்த புத்தகம் நாத்திகர்களிடையே ஒரு கலக்கு கலக்கியது. அந்த புத்தகத்தின் பெயர் "There is a God (இறைவன் இருக்கின்றான்)" என்பதாகும். அதில் தான் நாத்திகனாகவும் மார்க்சிஸ்ட்டாகவும் இருந்தது பற்றி, பின்னர் மனம் மாறியது பற்றி விரிவாக விளக்குகின்றார் ப்ளு.


       இந்த புத்தகம் குறித்து கருத்து தெரிவித்த MIT-யின் அணுசக்தி பொறியியல் துறையின் தலைவரான இயன் ஹட்ஷின்சன் பின்வருமாறு கூறுகின்றார்.


“Antony Flew’s book will incense atheists who suppose (erroneously) that science proves there is no God.” இறைவன் இல்லையென்று அறிவியல் நிரூபித்துவிட்டதாக (தவறாக) எண்ணிக்கொண்டிருக்கும் நாத்திகர்களை ப்ளுவின் இந்த புத்தகம் சினமூட்டுகின்றது


       தங்களின் வழிகாட்டியாக இருந்த ஒருவர் இப்படி தடம்மாறியது குறித்து தங்கள் மனதை சாந்தப்படுத்தியாக வேண்டுமே நாத்திகர்கள்?...என்ன செய்வது?...ஒருவேளை ப்ளு கிருத்துவதையோ அல்லது இஸ்லாத்தையோ ஏற்றிருந்தால் 'காசு கொடுத்துவிட்டார்கள், அதனால் ஏற்றுக்கொண்டுவிட்டார்' என்று சொல்லியிருக்கலாம். ஆனால், ப்ளு, இறைவன் இருக்கின்றான் என்று ஒப்புக்கொண்டாரே தவிர ஒருங்கிணைந்த மதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே நேரம், தன் மீது மதப்பிரச்சாரங்கள் நடத்தப்பட்டால் அதற்கு தான் தயாராகவே இருப்பதாக குறிப்பிட்டார்.


       ப்ளுவின் மனமாற்றத்தை பின்னர் எப்படித்தான் விளக்கம் கூறி தங்கள் மனதை சாந்தப்படுத்திக்கொள்வது?....இந்த நொடிப்பொழுதில் சில நாத்திகர்களது மனதில் உதித்ததுதான் சில அதிஅற்புதமான எண்ணங்கள். வயதாகிவிட்டதால் ப்ளு இப்படி பேசுகின்றார் என்றும், மனரீதியான பாதிப்பு (mentally declined) ஏற்பட்டுள்ளதால் இப்படி நடந்துக்கொள்கின்றார் என்றும் கூறினர். இதற்கும் சாட்டையடியாக விளக்கம் கொடுத்தார் ப்ளு.


       டாகின்ஸ்கின் கருத்துக்களை கடுமையாக விமர்சித்தார். உயிர்த்தோற்றம் குறித்த டாகின்ஸ்சின் கருத்தை "காமெடி" என்று கூறிய ப்ளு, டாகின்ஸ்சின் வாதங்கள் இப்படித்தான் இருக்குமானால் கேம் முடிந்துவிட்டதாக கூறினார்.


       "...Richard Dawkins' comical effort to argue in The God Delusion that the origin of life can be attributed to a "lucky chance." If that's the best argument you have, then the game is over" அதிர்ஷ்டவசமாக உயிர் உருவாக்கியிருக்கும் என்று தன்னுடைய புத்தகத்தில் டாகின்ஸ் கூறுவது ஒரு காமெடியான முயற்சியே ஆகும். இதுதான் உங்களுடைய மிகச்சிறந்த வாதம் என்றால், கேம் முடிந்துவிட்டது


       பரிணாம கோட்பாட்டிற்கு எதிராக முன்வைக்கப்படும் Intelligent Design (ID) கோட்பாட்டை ஒட்டியே தன்னுடைய எண்ண அலைகள் இருப்பதாக ப்ளு கூற, Intelligent Design கோட்பாட்டை ஆதரிக்கும் ஆய்வாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். ப்ளு போன்ற ஒருவர், வேகமாக வளர்ந்து வரும் அவர்களது கோட்பாட்டிற்கு ஆதரவுக்கரம் நீட்டியதை பெரும் புத்துணர்ச்சியாக எண்ணினர்.

       நாத்திகர்களின் மனதில் நீங்காத பாதிப்பை ஏற்படுத்திவிட்டார் ப்ளு. நாத்திகராக வாழ்ந்தவர் ஆத்திகராக மறைந்துவிட்டார்.
       வரலாறு முழுக்க, ப்ளு போன்ற பிரபல நாத்திகர்கள் அல்லது நாத்திகர்களாக இருந்த ஆய்வாளர்கள் தங்களது மனதை ஆத்திகத்தின்பால் திருப்பியதற்கு அறிவியல் முடிவுகளும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியா உண்மை.
       அறிவியல் நாத்திகத்திற்கு வழிவகுக்கின்றது என்று தங்கள் அறியாமையால் சிலர் எண்ணினால் அது அறிவியலைப் பற்றிய அவர்களது தவறான புரிதலே அன்றி வேறொன்றும் இல்லை.
       சிந்திக்க விருப்பமுள்ளவர்கள் சிந்திக்கட்டும். நடுநிலையோடு அறிவியல் முடிவுகளை ஆய்வு செய்யட்டும். உண்மையை அறிந்துக்கொள்ளட்டும்.

Comments

Post a Comment